பிசிசிஐ தனது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை மும்பையில் அக்டோபர் 18 ஆம் தேதி நடத்துகிறது. அப்போது கங்குலிக்கு பதிலாக பின்னி தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவில் சேராததால் பிசிசிஐ தலைவராக கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள்.
இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேவேளையில், ஜெய் ஷா 2-வது முறையாக பிசிசிஐ செயலாளராக தொடர உள்ளார்.
ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் கங்குலிக்கும் அளிக்கப்படாததுதான் இப்போது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது.
‘கடந்தாண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின்போது, கங்குலி பாஜகவில் இணைவார் என்று அக்கட்சி ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியது. அதற்கு மாறாக கங்குலி பாஜகவில் சேராததால் அவர் இப்போது குறிவைக்கப்பட்டுள்ளார்’ என்று மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென், “இது அரசியல் பழிவாங்கலுக்கு மற்றுமொரு உதாரணம். அமித் ஷாவின் மகனுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு, கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை? ஏனெனில் அவர் மம்தா பானர்ஜியின் மாநிலத்தை சேர்ந்தவர் அல்லது பாஜகவில் சேரவில்லை என கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் கட்சி நேரடியாக எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன்பும், பின்பும் இதுபோன்ற பிரசாரங்களை பாஜக செய்யும் என்பதால், கங்குலியின் பதவி விவகாரத்தில் அரசியல் இருக்கிறது என்ற ஊகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டியது பாஜகவின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
Source : NDTV
பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.