சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்துமத சாமியார் யதி நரசிங்கானந்தை பெண்கள் மீது அவதூறு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்த ஹரித்வார் காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. சாமியாரை ஹரித்வார் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 15ஆம் தேதி, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திதேந்திர தியாகியை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யதி நரசிங்கானந்தை ஹரித்வார் மகாராஜா நகர் கோட்வாலி காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை
இவ்வழக்கானது, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறை யதி நரசிங்கானந்திற்கு எதிராக பிரிவு 505-1(C), 509 (பெண்ணை அவமானப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமானவற்றை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான நரசிம்மானந்த், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை ‘தர்ம சன்சத்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிக்ழச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிங்கானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, ஜனவரி 14ஆம் தேதி, இவ்வழக்கில் தொடர்பாக, அண்மையில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற இந்து மத சாமியார் கைது செய்யப்பட்டார்.
விரைவில், இவ்வழக்கிலும் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்படுவார் என்று ஹரித்வார் காவல்துறை தெரிவித்துள்ளது.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.