தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவதும், திட்டங்களை தொடங்கி வைப்பதும் நல்லது தான். ஆனால் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய பங்கீடு பாக்கியை ஒன்றிய அரசு வழங்காததால் திட்டங்கள் செயல் படுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.” 2016 முதல் 16, 17 முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றிவிட்டு ஓர் இரு முறை விலையைக் குறைத்து விட்டு நாங்கள் விலையைக் குறைத்துவிட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி அரசின் தவறான கொள்கையால் பருத்தி விலை அதிகரித்துள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில் விலை ஏற்றமடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனைக்குக் கொடுத்ததால் அவர்கள் பதுக்கி வைத்து விற்பதால் விலையேற்றம் அதிகளவில் உள்ளது.
தமிழகத்தில் அதிக ஆலைகள் இருப்பதால் ஆலைகளை குஜராத்திற்கு மாற்ற வேண்டும் என்று மோடி இது போன்ற மோசமான நிலையை உருவாக்குகிறாரா என்பது தெரியவில்லை. பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும், தமிழக அரசும் கொள்முதல் செய்து நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவதும் திட்டங்களை தொடங்கி வைப்பதும் நல்லது தான் ஆனால், தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய பங்கீடு பாக்கியை ஒன்றிய அரசு வழங்காததால் திட்டங்கள் செயல் படுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் தமிழகம் வரும் மோடி வரி நிலுவையை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மேட்டூர் அணை வரலாற்றில் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது, இருப்பினும் தூர்வாரும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. அதை விரைவுபடுத்த வேண்டும், தண்ணீர் திறப்பது மட்டும் போதாது விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் வழங்க வேண்டும். உரம் பற்றாக்குறையை போக்கி விதைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தண்ணீர் திறந்து பயனில்லை அது கால்வாயில் மட்டுமே போக கூடிய சூழ்நிலை ஏற்படும்.
மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மின்சாரம் பற்றாக்குறையை போக்க மின் உற்பத்தியை தமிழக அரசு செய்ய வேண்டும். குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து தற்போது உள்ள நிலையை விவரிப்பது, மின் கட்டணத்தை உயர்த்துவார்களோ என்ற அச்சம் உள்ளது, அதை போக்க வேண்டும்.
திமுக அரசில் சில குறைகள் இருந்தாலும் ஒன்றிய பாஜக அரசில் 100 மடங்கு குறைகள் உள்ளன. மோசமான மதவெறி கட்சியான பாஜகவை எதிர்த்து அவர்களை அப்புறப்படுத்தக் கூட்டணி வைத்துள்ளோம். ஆன்மிக உணர்வு தவறு என்று சொல்பவர்கள் நாங்கள் அல்ல, அவர் அவர்கள் விரும்பும் தெய்வங்களை வணங்குவது அவர்களது உரிமை. அதே போல் கடவுள் இல்லை என்று கூறுவதும் அவர்கள் உரிமை தான். பாஜகவை அகற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகவே மதசார்பற்ற கூட்டணியினர் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து உள்ளோம்.
மின்சாரத்தை அதிகப்படுத்த எந்த திட்டத்தையும் 10 ஆண்டுகளாக அதிமுக செய்யவில்லை. மின்சாரத்தை அதிக விலை கொடுத்தே வாங்கி வந்துள்ளனர். அதன் விளைவுதான் தற்போது தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு காரணம். ராமேஸ்வரம் அருகே பாசி எடுக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது.
தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை பழக்க வழக்கங்களே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, உடனடியாக கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Source: news18 Tamilnadu
Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது I VCK Sanga Tamizhan I Jamadagni
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.