ஐஐடி கான்பூர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா, சில நாட்களுக்கு முன்பு ஐஐடி மண்டியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். புனித மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ‘தீய ஆவிகளை’ விரட்டுவதாக அவர் வெளியிட்ட காணொளி மிகுந்த சர்ச்சையாகியுள்ளது.
பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணிபுரிவதாக கான்பூர் ஐஐடியின் இணையதள தரவுகள் கூறுகின்றன. மேலும், டெல்லி ஐஐடியில் பி.எச்.டி பட்டமும் ஜெர்மன் தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் மற்றொரு பிஎச்டி பட்டமும் பெற்றுள்ளார். ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.
2020 இல் கொரோரா பொது ஊரடங்கின்போது , தினமும் 800 குழந்தைகளுக்கு உணவளிக்க அவர் வளாகத்தில் ஒரு சமூக சமையலறையை நடத்தியுள்ளார். இச்சயலுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏப்ரல் 15, 2020 அன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
1993 இல் “பேய்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு” உதவுவதற்காக சென்னைக்கு பயணமானதை விவரிக்கிறார். ‘ஹரே ராம ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரிப்பதோடு, பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்களையும் ஞானத்தையும் பயிற்சி செய்ய தொடங்கியதாகவும், புனித நாமத்தின் வலிமையை நிரூபிக்க தனது நண்பருக்கு உதவ முடிவு செய்ததாகவும் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா வெளியான காணொளியில் தெரிவிக்கிறார்.
“இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் குடியிருப்பிற்கு இரவு 7 மணிக்கு வந்தேன். 10-15 நிமிடங்கள் உரத்த கோஷத்திற்குப் பிறகு, அவரது தந்தையை நாங்கள் திடீரென்று பார்த்தோம், அவர் மிகவும் குட்டையானவர், முற்றிலும் வயதானவர், மிகவும் வயதானவர், நடக்கவே முடியாதவர், திடீரென்று அவரது கையும் கால்களும் அசைந்தன. அவர் கூரையைத் தொடும் அளவு ஒரு பயங்கரமான நடனத்தை ஆடினார். தீய ஆவியால் அவர் முற்றிலும் விழுங்கப்படுவதை நீங்கள் உணரலாம்” என்று பேராசிரியர் அக்காணொளியில் கூறுகிறார்.
“தீய ஆவியை” விரட்ட அவர்கள் “45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை” உரத்த கோஷங்களை எழுப்பினோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இக்காணொளி குறித்து பேராசிரியர் பெஹெராவிடம் பேசியபோது, “நடந்ததை விவரித்தேன். பேய்கள் உள்ளன. ஆம், நவீன அறிவியலால் பல நிகழ்வுகளை விளக்க முடியாது” என்றும் கூறினார்.
இந்தக் காணொளி ஏழு மாதங்களுக்கு முன்பு யூடியூப்பில் “கீதா லைவ் கீதையை கற்றுக்கொள்ளுங்கள்” என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டது. அவரது கருத்துகளுக்காக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெஹெராவை அணுகிய உடனேயே, வீடியோவின் அமைப்பு பொதுவில் இருந்து தனிப்பட்டதாக மாற்றப்பட்டது.
பேராசிரியர் பெஹெரா ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே என்று ஐஐடி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.