கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை பற்றி பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம்தான் இந்த கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின் வீட்டில் வரதட்சணை கொடுமை தாங்கமுடியாமல் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது.
வாட்ஸ்-அப் செய்திகள், அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்தியத் தண்டனைச் சட்டம் 304 – பி பிரிவின் கீழ் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை குறித்த தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் எனச் கூறப்பட்டுள்ளது.
விஸ்மயாவின் கணவர் கிரண் குமார், மோட்டார் வாகனத் துறையில் ஆய்வாளராகப் பணியிலிருந்தவர். இந்த வழக்கை ஒட்டி கேரள அரசு கிரண் குமாரை முதலில் பணி இடைநீக்கமும் பின்னர் பணி நீக்கமும் செய்தது.
விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்துக்காக 100 சவரன் நகையும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் பணமும் நிலமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கார் வாங்கியதில் கிரண் குமாருக்கு விருப்பக் குறைவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த கார், தன் தகுதிக்குக் குறைவு என அவர் கூறியிருக்கிறார்.
எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்
இதை வைத்து மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார். மனைவியின் வீட்டுக்கு வந்தபோது சண்டை முற்றிக் கைகலப்பாக மாறியிருக்கிறது. விஸ்மயாவை அடித்ததைத் தட்டிக் கேட்ட விஸ்மயாவின் அண்ணனும் தாக்கப்பபட்டுள்ளார். இந்தப் பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று சமாதானம் ஆகியிருக்கிறார்கள். அதன் பிறகு விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. தொலைப்பேசியில் அம்மாவுடன் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்தாண்டு ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினத்தில் விஸ்மயா தன் தந்தைக்கு வாழ்த்து சொன்னது பிரச்சினை ஆகியிருக்கிறது. அதில் தனது அப்பாவிடம் தான் பட்ட துன்பங்கள் குறித்துப் பேசும் ஆடியோ ஆதாரமாகப் பதிவாகியிருக்கிறது.
அதே சமயம் ஜூன் 19 அன்றே அவரது சடலம் குளியலறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 வயது பெண் வரதட்சணை கொடுமையால் மரணமான சம்பவம் கேரளத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது.
Source : LIVELAW
ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.