சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என்றும் கோயிலைப் பாதுகாப்பதற்கு அரசின் தலையீடு அவசியம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து வெளியே நிறுத்தியுள்ளார்கள்.
நேற்று முன் தினம் அறநிலையத்துறை அமைச்சர், சிதம்பரம் கோயிலுக்கு சென்ற போது அளித்த ஊடக பேட்டியில் ‘எல்லாம் சுமூகமாக நடக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக தீட்சிதர்களின் இன்றைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.
பாரம்பரியமான கலை பொக்கிஷங்களும், நீண்ட வரலாறும் உள்ள தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல, மக்களின் சொத்தே ஆகும். எனவே அங்கு நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு.
கோயில் பராமரிப்பும், கணக்கு வழக்குகளும் ஒழுங்காகத்தான் நடக்கிறது எனில் ஆய்வு செய்ய தடுப்பது ஏன் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
தீட்சிதர்களின் இந்த மோசமான அணுகுமுறை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானதாகும். இப்போக்கினை அனுமதித்தால் கோயிலுக்கோ, கோயிலின் பாரம்பரிய சொத்துக்களுக்கோ எது நடந்தாலும், அரசாங்கம் தலையிட முடியாது என்ற ஆபத்தான நிலைமை உருவாகிடும். எனவே தமிழ்நாடு அரசாங்கம் தனது கடமையில் இருந்து பின் வாங்கிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.
மேலும், உத்திரப்பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொண்ட வழிமுறையை பின்பற்றி, ஒரு தனி சட்டம் இயற்றி, சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெனவும் வற்புறுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview | Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.