உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி தர இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை அக்டோபர் 2-ந்தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி – தமிழ்நாடு காவல்துறை அனுமதி
இதையடுத்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ”நவம்பர் 6-ந்தேதி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார். கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ”தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் அல்லது உள்ளரங்கில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்” என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
ஆர்எஸ்எஸ், நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், எஸ்.பிரபாகரன், என்.எல்.ராஜா, வழக்கறிஞர் ரபுமனோகர் உள்ளிட்டோர், ”தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழும்போது, ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு மட்டும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை அரசு காரணம் காட்டுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 500 இடங்களில் அனுமதி வழங்கியபோது, ஆர்எஸ்எஸ், ஊர்வலத்துக்கு மட்டும் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என 3 இடங்களில் அனுமதியளிப்பது என்பது ஏற்க முடியாது. உளவுத்துறை அறிக்கையைக் காரணம் காட்டி அரசு தப்பிக்க நினைக்கிறது. எனவே, 50 இடங்களிலும் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
அப்போது நீதிபதி ஜி.கே.இளந்திரையன் குறுக்கிட்டு, 24 இடங்களில் காவல்துறையினர் ஏன் அனுமதி வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ”ஆர்எஸ்எஸ், ஊர்வலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை மனித சங்கிலி நடத்தவே அனுமதி கோரியது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” என்று விளக்கம் அளித்தார்.
காவல்துறையினரின் அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதி, கோவையைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கலாமே என்றார். இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர், ”மக்களின் பாதுகாப்பே பிரதானமானது. தற்போது ஆர்எஸ்எஸ், நிர்வாகிகளின் வீடுகளுக்கே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயிரைத் துச்சமாக நினைத்து பணியாற்றும் உளவுத்துறையினரின் அறிக்கையை புறம் தள்ளிவிட முடியாது” என்று கூறினார்.
மனுதாரர்கள் தரப்பில், உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. அமைதியான முறையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவே அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து வருகிற வெள்ளிக்கிழமை (நாளை) உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.