குடியரசு தினத்தன்று விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த டிராக்டர் பேரணிக்கு, டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.
தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு
டிராக்டர் பேரணிக்கு தடைகோரி, மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், டிராக்டர் பேரணி தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் டெல்லி காவல்துரையிடமே உள்ளது என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 23) விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், டெல்லி காவல்துறை குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு அனுமதியளித்துள்ளது.
டெல்லி காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராஷ்டிரிய விவசாயிகள் மகாசபையின் செய்தித் தொடர்பாளர் அபிமன்யு கோஹர், “டெல்லிக்குள் டிராக்டர் பேரணி செல்ல டெல்லி காவல்துறை அனுமதியளித்துள்ளது. பேரணியில் பங்கேற்க பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏற்கனவே ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இருந்து சிங்கு எல்லைக்கு வந்துவிட்டனர். மற்ற ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நாடு முழுவதில் உள்ள விவசாயிகளிடமிருந்து, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.” என்று தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
“பேரணியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்கின்றன. அவை டெல்லியின் வெவ்வேறு எல்லைகளில் இருந்து தொடங்கி, நகருக்குள் சென்று, பின்னர் வெளியே வரும். இந்தப் பேரணியை ஒருங்கிணைக்க ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 2,500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதற்கு பணியாற்றுவார்கள்.” என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “ராஜ்பாத்தில் நடக்கும் அரசின் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே விவசாயிகளின் பேரணி தொடங்கும்.” என்று விவசாயிகள் சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.