டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 131 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றி பெற்றிருந்த பாஜகவின் ஆதிக்கத்தை ஆம் ஆத்மி கட்சி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 131 வார்டுகளிலும், பாஜக 99 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எளிதாக வாய்த்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தம் 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்குக் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது
இந்நிலையில் இன்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையின்படி பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. 126 வார்டுகளைக் கைப்பற்றும் கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றும். இந்தச் சூழலில் 126 வார்டுகளையும் தாண்டி 131 தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.
சற்று முன்னர் மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக 239 வார்டுகளின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 131 வார்டுகளிலும், பாஜக 100 வார்டுகளிலும் காங்கிரஸ் 7 வார்டுகளிலும், சுயேச்சை 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த மாநகராட்சித் தேர்தல், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேரதல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சியாக உருவெடுத்து அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமானதாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறியிருந்தனர். அதேபோல், பாஜகவுக்கும் டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றுவது கவுரவ பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் இப்போது ஆம் ஆத்மி எளிதான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.இதனால், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கட்சி உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டியுள்ளார். நாளை (டிசம்பர் 8ஆம் தேதி) வெளியாகும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
அம்பலமான கேசவ விநாயகம் | ஆட்டுக்குட்டிக்கு ஆப்படித்த சூர்யா | Aransei Roast | BJP | Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.