ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள பதான், படத்தில் இடம்பெற்றுள்ள பேஷ்ரம் ரங் பாடலில், தீபிகா படுகோனே காவி நிற பிகினி அணிந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இந்த படம் வெளியிடாமல் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அயோத்தியைச் சேர்ந்த இந்துத்துவ சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துவிடுவேன் என கூறியுள்ளார். மேலும், யாராவது ஷாருக்கானை உயிரோடு எரித்தால், அவருக்காக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காவி நிறத்தை அவமதிப்பு செய்த பதான் படத்தை திரையிடும் திரையரங்குகளையும் எரிப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாடல் குறித்து முன்னதாக கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் மஹந்த் ராஜு தாஸ், “பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்து கடவுளரை அவமதிக்கின்றன என்று தெரிவித்திருந்தார்.
பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் தான் என்ன?. வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்” என்று அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் மஹந்த் ராஜு தாஸ் கூறியுள்ளார்.
மேலும் வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ‘பதான்’ படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “காவி உடை அணிந்து கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர், சிறுமியை ஒரு சாமியார் பாலியல் வன்கொடுமை செய்கிறார், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கின்றனர். இதெல்லாம் தவறில்லை, ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி நிற உடை அணிந்தது மட்டும் தவறா? சும்மா கேட்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
Source : economictimes
Impersonating as NIA officials Bjp Cadre involves in 20 lakhs fraud | Annamalai | Deva’s Update 75
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.