சேலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேரை இடைநீக்கம் செய்து சேலம் காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான அவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினர் கடந்த 11ம் தேதி கைது செய்து மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார்
இதற்கு காவல்துறை துன்புறுத்தலே காரணம் எனக்கூறி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) சரத்குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ், இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை, காவல்துறை மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இறந்த பிரபாகரனின் சகோதர்ர் சக்திவேல் சேலம் அரசு மருத்துமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை இடைநீக்கம் செய்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்
இதையடுத்து இன்று உயிரிழந்த பிரபாகரனின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.