Aran Sei

‘கைதுகள், பொய் வழக்குகள்; தமிழக விவசாயிகளை பழிவாங்கும் தமிழக அரசு’ – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்ட திருவாரூர் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், விவசாயிகள் போராட்டத்தையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டது. அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின விழா முடிந்தற்குப் பிறகு அமைதியாகப் பேரணி நடத்திட, காவல்துறை அனுமதி மறுத்துத் தடை விதித்தது. கொரானா நோய்த்தொற்று மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணங்களைக் கூறி ஜனநாயகத்திற்கு விரோதமாக அனுமதி மறுத்தது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

“நேற்று முன்தினம் (ஜனவரி 26) பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறையினரின் தடையை மீறி டிராக்டர் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளது.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி, திமுகவைச் சேர்ந்த பாரதி, துரை உட்பட 5 பேரை விடியற்காலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் வைத்துக் காவல்துறை கைது செய்துள்ளது. கொலை முயற்சி உட்பட பிணையில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்கு புனைந்து அடக்கு முறையை ஏவி சிறையிலடைத்துள்ளது. இன்னும் பலரை கைது செய்யும் நோக்கத்துடன் காவல்துறை தேடி வருகிறது. தமிழக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு

போராடும் விவசாயிகள்மீது வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முறியடித்துவிடலாம் என்பது அதிமுக அரசின் பகல் கனவாகவே முடியும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழக காவல்துறை விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மற்றும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதி மறுத்துப் பாரபட்சமாக நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், விவசாயிகள் போராட்டத்தையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

காவல்துறையினரின் அடக்குமுறை, அராஜகம், பொய்வழக்கு ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

‘கைதுகள், பொய் வழக்குகள்; தமிழக விவசாயிகளை பழிவாங்கும் தமிழக அரசு’ – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்