அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் காவல்நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது மற்றும் அதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிப்பட்டது தொடர்பாக கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சஃபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல்நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த நாள், தீவைப்பிற்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஐந்து இஸ்லாமியர்களின் வீடுகளை நாகோன் மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது.
அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக
இஸ்லாமின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேரின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கபட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்நிலையத்தின் மீதான தாக்குதலுக்கும் வீடு இடிக்கப்பட்ட நிகழ்விற்கும் தொடர்பில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது. தீவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காவல் நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சல்னாபோரியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக கர்பி மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொள்ளவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், தீவைப்பு சம்பவம் தொடர்பாக படத்ராபா காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, 10 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட பிறகு பேசிய, அசாம் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், ராணா கோஸ்வாமி, “காவலர் மரணம் மற்றும் காவல் நிலையம் எரிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காவல் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. அது நிறுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தில் போராட்டம் அனுமதிக்கப்பட்டாலும், பொதுச் சொத்துக்களை எரிப்பதை அனுமதிக்க முடியாது, கடுமையாக கையாளப்பட வேண்டும். இரண்டு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
“காவல் நிலைய மரணம் மற்றும் காவல் நிலையம் எரிக்கப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வீடுகள் இடிப்பு நடவடிக்கை குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். இன்றைக்கு விதிகளை பின்பற்றாமல் நிர்வாகம் செய்ததை, நாளை பொது மக்கள் நிர்வாகத்தை உதாரணம் காட்டி செய்வார்கள். இது குழப்பத்திற்கு வழிவகுக்கும். எனவே, இடிப்பு நடவடிக்கையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுகிறோம்,” என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் சம்பக் கலிதா கூறியுள்ளார்.
Source: The Telegraph India
Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview | G Square | Savukku Shankar DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.