கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும் அவரை விடுதலை செய்ய ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி.ராஜு தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி தொடர்பான மாணவி ஸ்ரீமதி நீதி கேட்டு நடந்த போராட்டம் மற்றும் கலவர வழக்கில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர், தோழர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டு ஜுலை 18 ம் தேதி முதல் இன்று வரை ஒன்றரை மாதமாக திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
அவருக்கும் கலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலீசுக்கு நன்கு தெரியும். தோழர் ராமலிங்கம் 56 வயதானவர் மற்றும் அன்றாடம் வலிப்பு நோய்க்காக மாத்திரை உட்கொள்பவர் இதனாலேயே உடல்நலிவுற்றவர்.
ஆனால் தனது உடல்நிலை பாதிப்பை ஒருபோதும் கருதாமல் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் எண்ணற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று செயல்பட்டு வருபவர்.
அவரது செயல்பாட்டையும் மக்கள் அதிகாரத்தின் செயல்பாட்டையும் குறுக்கு வழியில் முடக்குவதற்கு போலீசு கலவரத்தில் அவரை தொடர்பு படுத்தி பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 30-8-2022 அன்று அவரது பிணைமனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் தோழர் ராமலிங்கம் மீது பள்ளி கலவர வழக்கில் இந்த வழக்கு மட்டுமல்ல, மேலும் ஒரு வழக்கு உள்ளது. அதோடு ஏற்கனவே அவர் மீது ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளது என பிணை மனுவுக்கு ஆட்சேபணை செய்தவுடன், நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளார்.
இதே நீதிபதி இளந்திரையன் மாணவி ஸ்ரீமதியின் படுகொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகிகளின் பிணை மனுவிற்கு, தமிழக அரசு ஆட்சேபணை செய்த போது. அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் சட்ட வரம்புகளை மரபுகளை மீறி அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என பிணை உத்தரவில் சொல்லி அவர்களுக்கு ‘நிரபராதி சான்றிதழ்’ கொடுத்து பிணை வழங்கினார்.
இத்தகைய வர்க்கநீதி பார்க்கும் நீதிமன்றம் தோழர் ராமலிங்கத்திற்கு பிணை மறுத்துள்ளது. மேலும் பிணை வழங்கப்பட்ட பிற வழக்கில் வைப்புத்தொகையாக தொகையாக ரூ.50,000 கட்ட வேண்டும் என உத்திரவிடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வைப்புத் தொகை ரூ 10000 மட்டுமே கட்ட சொல்லி பிணை வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் இவ்வளவு அதிக தொகை கட்ட சொன்னால், முடியாதவர்களின் நிலை என்னவாகும். அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டுமா?. அல்லது கந்து வட்டிக்கு வாங்கி விடுதலை பெற வேண்டுமா? இதுதான் இந்திய நீதிமன்றங்களின் யோக்கியதையாக உள்ளது.
பலரும் கருதிக் கொண்டிருப்பதைப் போல நீதிமன்றங்களை வழிநடத்துவது அரசியலமைப்பு சட்டமல்ல. பெரும்பான்மை மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் சனாதன-மனுதர்ம சட்டம்தான்.
சமகாலத்தில் நடக்கும் இத்தகைய கொடூரங்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் எமது தோழருக்கு மட்டுமல்ல! மாணவி ஸ்ரீமதிக்காக நீதி கேட்டு போராடி சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.
அதுமட்டுமின்றி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கையில் இருந்து சட்டவிரோதமாக போலீஸ் பறிமுதல் செய்த உடைமைகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் குரல் கொடுக்கப் வேண்டும் என கோருகிறோம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி.ராஜு தெரிவித்துள்ளார்.
Madras Hc demands for ban on YouTube channels – Kallakurichi Case Latest update | Haseef | Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.