கோவையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து , ரகளையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் உட்பட 5 பேர் மீது பீளமேடு காவல்துறையினர் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் 8 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி முகாமினை நேற்று ’நாம் தமிழர்’ கட்சியினர் முற்றுகை இடுவதாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணிகளை பார்வையிட வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன், பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்ல அறிவுறுத்தினார். அப்போது அவர்கள் பள்ளி வளாகத்திக்குள் செல்ல மறுத்து, துணை ஆணையர் ஜெயசந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த நிலையில், காவல்துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியைச் சேர்ந்த கோவிந்தன், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த அருண், கருப்பசாமி ஆகிய 5 பேர் மீது இரண்டு பிரிவுகளில் (இந்திய தண்டனைச் சட்டம் 143,353 காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.