கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் அப்படத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதிமுகவை சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அங்கு மாட்டியுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்து நேற்று (ஏப்ரல் 23) அங்குச் சென்ற திமுக கவுன்சிலர்கள் அப்படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கலாம் என திமுக கவுன்சிலர் கனகராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாஜகவினர் பேரூராட்சி தலைவர் அனுமதியுடன் தான் புகைப்படம் வைத்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து பேரூராட்சி தலைவர் மருதாசலத்திடம் திமுகவினர் கேட்ட போது அவர் முறையாகப் பதிலளிக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் படம் அகற்றப்பட்ட தகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Source : puthiyathalaimurai
மரண படுக்கையிலிருந்து Congress எழுமா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.