சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை வென்றெடுக்கும் விதமாக இன்று மாலை 3 மணி முதல் 5 மணிவரை அடையாரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமன்மடபத்தில் ஒன்று கூடுவதற்கு தூய்மைப் பணியாளர்களின் நண்பர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில், நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு மனிதக் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து வந்த இழிவுநிலையைத் தான், எல்லாக் காலத்துக்கும் தொடர நினைக்கிறது போல ‘சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்.’
தற்காலிக மற்றும் ஒப்பந்த பணி என்ற பெயரில், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல், பணி உத்தரவாதம் இல்லாமல், உயிர் பாதுகாப்பின்றி சமூக பாதுகாப்புமின்றி, பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ள CMWSSB துப்புரவு தொழிலாளர்கள், சமூகநீதிப் போற்றும் அரசிடம் சாமானிய நீதி கேட்டு 5 நாட்களாக போராடிவருகின்றார்கள். இரவு பகல் பாராமல் தொடரும் வேலைநிறுத்த – உள்ளிருப்பு போராட்டத்தில், 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் “நிரந்தரப் பணி” என்ற ஒற்றைக் கோரிக்கையை முழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை ஆகிய அத்தியாவசிய பொதுச் சேவைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதென்பது, இயந்திரங்களுக்கு அளிக்கும் மதிப்பு முக்கியத்துவத்தில் எள்ளவைக் கூட இயந்திரமாய் பயன்படுத்தப்படும் மனிதர்களுக்கு அளிக்காத பேரவலத்தை மேலும் தீவிரமாக்கும்.
சமூகத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களின் கோரிக்கை திக்கெட்டிலும் ஓங்கி ஒலிக்க, அவர்களோடு துணை நிற்போம்! வரலாற்றுப் பக்கங்கள் முழுவதும் படிந்திருக்கும் அழியாக் கறைகளைச் சலவை செய்ய, நாம் நிற்கவேண்டிய பக்கம் இப்பக்கமே என்று தூய்மைப்பணியாளர்களின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.