போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு) மேற்கு வங்கத்தின் மாநிலச் செயலாளராகச் செயல்பட்டு வரும் பமீலா கோஸ்வாமி, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரென்று அவர் தந்தை கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னர், கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து சில லட்சங்கள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் (100 கிராம் கொக்கேய்ன்) பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாகக் பேசிய காவல்துறை அதிகாரிகள், “அவர்(பமீலா) பல நாட்களாகப் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இன்றைய தினம், தன்னுடைய வாடிக்கையாளருக்குப் போதைப்பொருட்களை கொடுக்க முற்பட்டபோது, 8 வாகனங்களில் சென்று அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தோம் என்று தெரிவித்திருந்தார்.
உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பமீலா, காரில் இருந்து இறங்கும்போது, “இது பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் உதவியாளராக இருக்கும் ராகேஷ் சிங்கின் சதித்திட்டம். அவரைக் கைது செய்ய வேண்டும். வழக்கைச் சிறப்பு புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய மேற்கு வங்க பாஜகவின் செய்தி தொடர்பாளர், சாமிக் பட்டாச்சார்யா, “மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் பட்சத்தில், இது ஜோடிக்கப்பட்ட வழக்காகக் கூட இருக்கலாம்” எனக் கூறியிருந்த நிலையில், பமீலா இவ்வாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
”நல்லவர்கள் யாரும் பாஜகவில் இருக்க முடியாது. கிரிமினல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்துபவர்கள் மட்டுமே பாஜகவின் அங்கத்தினாரக இருக்க முடியும்” என்று மேற்கு வங்க அமைச்சர் பர்ஹாத் அக்கீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பமீலாவின் தந்தை கெளசிக் கோஸ்வாமி கடந்த ஏப்ரல் மாதத்தில் காவல்துறையிடம் கொடுத்த புகாரில் தனது மகளை, பிரபீர் குமார் டே என்பவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் மகளையும் பிரபீரையும் கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாக கல்கத்தா காவல் துறையினர் கூறியுள்ளனர்.
கெளசிக் கோஸ்வாமி கொடுத்தப் புகாரின் அடிப்படையில்தான், அவ்விருவரையும் கண்காணித்ததாகவும், அவர்களுக்குப் போதப் பொருள் கடத்தல் தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.