பாஜக அரசின் தவறான முடிவுகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக நாட்டில் 25 கோடி குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பிளவு விரிவடைந்திருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவையில் விலைவாசி உயர்வுகுறித்த விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, “பொருளாதாரத்தின் 5 தூண்களான சேமிப்பு, முதலீடு, உற்பத்தி, நுகர்வு, வேலைவாய்ப்பு ஆகியவை ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் தகர்க்கப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் மூலம் 23 கோடி பேர் மீண்டும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளது தெரியவந்துள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுகளில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 100லிருந்து 142 ஆக உயர்ந்துள்ள நிலையில், கீழ் தட்டு மக்களின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் செல்வத்தின் 77 விழுக்காடு செல்வம் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினரின் கைகளில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்றும், இந்தியாவில் உள்ள முதல் 92 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 55 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பிற்கு சமமாகும்.” என்று அவர் கூறியுள்ளார்.
நமது நாட்டில் இதை விட பெரிய சமத்துவமின்மை இருக்க முடியாது என்று கூறிய அவர், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு தற்போதை பொருளாதார சூழ்நிலைக்கு வழிவகுக்கும் காரணியாக இருக்கலாம். ஆனால், நவம்பர் 8, 2016 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே பாதிப்படைந்திருந்தது. என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பிற்கு பிறகு, அரசு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. இதனால், குறைந்தபட்சம் 2.30 லட்சம் சிறு தொழில்கள் பாதித்தன.
5ஜி அலைக்கற்றை ஏலம்: 88 ஆயிரம் கோடிக்கு கைப்பற்றிய அம்பானியின் ஜியோ நிறுவனம்
”ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தொழில்களை மட்டுமல்ல, நாட்டின் வேலைவாய்ப்பையும் பாதித்துள்ளன.”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
”வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் சேர ஒரு நாட்டின் தகுதிவாய்ந்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வேலைவாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இன்று சுமார் 40 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது.” என்று மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
”இந்தியா வளர்ந்த நாடாக மாற வேலைவாய்ப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 84 கோடியாக அதிகரிக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்ட வசமாக அரசாங்கத்திடம் இதற்கான எந்த திட்டமும் இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டி உயர்வுகுறித்து பேசிய அவர், ”மாவு, தயிர், பன்னீர், பென்சில் மற்றும் ஷார்பனர் மீதான வரியை அதிகரித்துள்ளீர்கள். நீங்கள் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை” என்று மணீஷ் திவாரி குற்றம்ச்சாட்டியுள்ளார்.
சுடுகாடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை அறிந்து மனம் புண்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுகுறித்து பேசிய அவர், “பெட்ரோலிய பொருட்கள்மீதான கலால் வரி மற்றும் ஈவுத் தொகைமூலம் ரூ. 27 லட்சம் கோடியை வசூலித்து, அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. ஆனால், அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது சொந்த பட்ஜெட்டை ஒழுங்குபடுத்தியிருக்கலாம், ஆனால் நாட்டின் 25 கோடி குடும்பங்களின் வாழ்க்கையை முற்றிலுமாக கெடுத்துவிட்டது. ஒவ்வொரு இல்லத்தரசியும் கண்ணீருடன் உள்ளனர். நீங்கள் என்ன மாதிரியான தேசத்தை கட்டமைக்கிறீர்கள்” என்று மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
Source: The New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.