“ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிவரங்களையும் எடுக்க பாஜக அரசு முன்வர வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1931-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புதல்
விடுதலை பெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் 2001-ல் ஓபிசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் சமூக நீதித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனிடையே 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்டு 30, 2018 இல் நடந்தது. இதில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு” என்று பாஜக அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மாண்பமை நீதிபதிகள், “மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று எதன் அடிப்படையில் ஒன்றிய அரசு தெரிவிக்கிறது? 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்கள் நலனுக்காக மாற்ற பரிசீலிக்கலாமே” என்று அறிவுறுத்தி உள்ளனர். ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிவரங்களையும் எடுக்க பாஜக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சேட்லைட் சேகரின் ரூ.2000 ‘சிப்’ | கருப்பு பணத்தை காவியாக்கிய மோடி | Aransei Roast | BJP | MODI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.