மைசூரு-பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ஒன்றிய அரசு மாற்றியதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, “பாஜக அரசு திப்பு எக்ஸ்பிரஸை உடையார் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக 3 போர்களை திப்பு சுல்தான் நடத்தியதால் தான் பாஜக அவரை கண்டு எரிச்சல் அடைகிறது. வேறொரு ரயிலுக்கு உடையார்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். திப்புவின் பாரம்பரியத்தை பாஜகவால் ஒருபோதும் அழிக்க முடியாது. அவர் உயிருடன் இருந்தபோது ஆங்கிலேயர்களை பயமுறுத்தினார், இப்போதும் ஆங்கிலேயர்களின் அடிமைகளை பயமுறுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
திப்பு எக்ஸ்பிரஸின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்ற வேண்டுமென்று மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, இதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த ரயிலின் பெயர் மாற்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிம்ஹா தனது கடிதத்தில், அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு உடையார்களின் பங்களிப்பை போற்றவேண்டும் எடுத்துரைத்தார்.
இதேபோல், தல்குப்பா-மைசூரு எக்ஸ்பிரஸ், சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் பிறந்த கவிஞரின் நினைவாக குவெம்பு எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தல்குப்பா விரைவு ரயிலுக்கு குவெம்பு பெயரை மாற்றுவதில் எந்த சர்ச்சையும் இல்லாத நிலையில், திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை மாற்றியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைக்க பாஜகவின் பெயரை மாற்றும் நடவடிக்கையின் தொடர்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
கர்நாடகா: பள்ளிப் பாடத்தில் திப்பு சுல்த்தான் – சில பகுதிகளை நீக்க மறு ஆய்வுக் குழு பரிந்துரை
கர்நாடகாவில் ரயில் இணைப்பை விரிவாக்க மைசூரு உடையார்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. எனவே பழைய ரயிலின் பெயரை மாற்றாமல், புதிய ரயிலுக்கு அவர்களின் பெயரை சூட்டி ரயில்வேத்துறை கவுரவித்திருக்கலாம் எனவும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 15, 1980 அன்று மைசூரு மற்றும் பெங்களூருவை இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையை திப்பு எக்ஸ்பிரஸ் தொடங்கியது.
Source : india today
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.