அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் விற்பனையாளரான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்தித்திற்கு தீ வைத்தனர். காவல்நிலையத்தை எரித்தவர்கள் ஜிகாதிகள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சஃபிகுல் இஸ்லாம் என்ற இளைஞர் காவலில் வைக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து, காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
காவல் மரணத்தில் இறந்தவர் தொடர்பாக கூறிய காவல்துறை , ஷஃபிகுல் இஸ்லாம் குடிபோதையில் பிரச்சினை செய்ததால் அவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஷஃபிகுல் இஸ்லாமிடம் காவல்துறையினர் 10,000 ரூபாய் லஞ்சம் மற்றும் ஒரு வாத்து கேட்டுள்ளனர். அதனைத் தர முடியாது என்று ஷஃபிகுல் இஸ்லாம் கூறியதால் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று மரணமடைந்தவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
காவல்நிலையத்துக்கு தீ வைப்பு சம்பவம் நடந்த பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் என்று போலி ஆவணங்களைக் காட்டி வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.
காங்கிரஸ் மாநில கமிட்டியின் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, படத்ராவாவுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு நடத்த கட்சி உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அப்துல் கலீக் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “காவல்நிலையத்தின் மீதான எந்தத் தாக்குதலையும் எனது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. ஆனால், காவல்துறையினரால் தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது நேரடி மனித உரிமை மீறல்” என்று குறிப்பிட்டுள்ளார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரிபுன் போரா கூறுகையில், காவல்நிலையத்தில் தீவைக்கப்பட்ட சம்பவம் கவலைக்குரிய விஷயம். “சட்டத்தின் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. மேலும் ஒரு காவல் நிலையத்தை எரிப்பது சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலையம் மீதான தாக்குதலை “ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத செயல்” என்று கூறிய ஆளும் பாஜக, ‘பயிற்சி பெற்ற ஜிகாதிகள்’ தீ வைப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜகவின் மூத்த செய்தித் தொடர்பாளர்களான ரஞ்சீவ் குமார் சர்மா, சுபாஸ் தத்தா ஆகியோர் தெரிவிக்கும்போது, “படத்ராவா காவல் நிலையம் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியக் குற்றவாளிகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முகாம்களில் பயிற்சி பெற்றனர்” என்று கூறியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை தேசத்திற்கு எதிரான குற்றவாளிகளாகக் கருதி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த செய்தித் தொடர்பாளர்களான ரஞ்சீவ் குமார் சர்மா, சுபாஸ் தத்தா ஆகியோர் வலியுறுத்தினர். சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கையை மேற்கொள்ளும் முடிவை ஆளும் பாஜக கட்சி வரவேற்றுள்ளது.
Source: The New Indian express
LIC யை திட்டமிட்டு அழிக்கும் Nirmala Sitharaman | LIC Senthil Kumar Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.