ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே திரண்ட இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றால் 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கான தேர்வு நடைபெறாத நிலையில் அத்தேர்வை நடத்துமாறு கோரிக்கை வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘எங்களுக்கு நீதி வேண்டும்’, ‘தேர்வுகளை நடத்துங்கள்’ போன்ற பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரணி, திருவண்ணாமலை, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களே பெருமளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று வேலூரில் இளைஞர்கள் சிலர் அறவழியில் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்து இளைஞர்கள் பெரும் அளவில் ராணுவத்தில் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்குச் சேர்த்துக் கொள்ளும் “அக்னிபத்” திட்டத்தை ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பிகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிஹார், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பீகார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Source : hindu tamil
ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj Interview |
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.