“நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி காதுகொடுத்துக் கூட கேட்பதில்லை, அதற்கு பதிலளிப்பதும் இல்லை. எந்த விவாதமும் இன்றி 4 நிமிடங்களில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஆவடி ஓசிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன் பொன் விழா அரங்கில் ஆவடி படை உடை தொழிற்சாலை ஊழியர்கள் சங்க வைர விழாவில் ‘இந்திய நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது’ என்ற தலைப்பில் 5 ஆவது தொடர் கருத்தரங்கம் நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. அதில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசியுள்ளனர்.
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான மசோதாக்கள் விவாதத்திற்கு அனுமதிக்காமலேயே நிறைவேற்றப்படுகின்றன. கடந்த காலங்களில் 70 விழுக்காடு மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும். ஆனால் இப்போது எந்த மசோதாவும் அனுப்பப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார்.
“ஜவஹர்லால் நேரு காலத்தில் நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதால் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் ஒரு நிறுவனத்தை நட்டமில்லாமல் நடத்த முடியுமென்றால் அதை ஏன் அரசால் நடத்த முடியாது. இது அரசுக்கு அவமானமல்லவா?” என்று இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாடாளுமன்ற விதிகள் அனுமதிக்கும் உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசு எதில் தலையிட வேண்டுமோ அதில் தலையிடுவதில்லை. எதில் தலையிட வேண்டாமோ அதில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றம், கடந்த 8 ஆண்டுகளாகச் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் உள்ளது. ஜனநாயக அமைப்புக்குள் இருந்து கொண்டே அதை அழிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? – சு.வெங்கடேசன் கேள்வி
17 ஆவது மக்களவையில் ஒரு மசோதா மட்டுமே நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தின் பண்பாடு மற்றும் மொழித் தன்மையைச் சீர்குலைத்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அதற்கு இந்தியில் பதில் அனுப்புகிறார்கள். ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் ஜனநாயக மாண்புகள் முற்றிலுமாக சீர்குலைக்கப்படுகின்றன” என்று சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
Source : hindu tamil
இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.