கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான 20% இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லுபடியாகுமா, ஆகாதா என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் உட்பட பலரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், இவ்வழக்கை கூடுதல் நீதிமன்ற அமர்விற்கு அனுப்ப வேண்டாம், 2 நீதிபதிகள் கொண்ட தற்போதைய அமர்வே இவ்வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏதிரானது என்று 2021 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கை மெரிட் தகுதியின் அடிப்படையில் விசாரிப்பதாகவும், ஆகவே மனுத் தாக்கல் செய்துள்ள அனைத்து தரப்பினரும் அவர்களது வாதங்களை முன்வைக்குமாறு கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன், முகுல் ரோஹத்கி மற்றும் குமணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு, மாநிலத்திற்கு சட்டமியற்றும் தகுதி இல்லை என்ற தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் உள்ளது என்று தங்களது வாதத்தை சமர்ப்பித்தனர். அவை,
ஹிஜாப் தடை: இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அதிகரிக்கும் கண்டனங்கள்
“இட ஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1957 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீண்டாமையை மட்டும் அனுபவிக்கவில்லையே தவிர இவர்களும் பட்டியல் சாதியினரின் நிலையிலேயே இருந்தனர்.இந்த பிரிவில் வரும் சில சமூகங்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் குற்றப் பரம்பரையினர் சட்டங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைக்கப்பட்டனர். தமிழ்நாடு இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் அடிப்படையில், வன்னியக்குல சத்திரியருக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை வழங்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டு மக்கள்தொகையில் வன்னியர்கள் 13.5% ஆக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு 10.5% வரை மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று மூத்த வழக்கறிஞர் எம்.என் ராவ் தனது வாதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
2018 இன் 102வது திருத்தச் சட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளின் பட்டியலை தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தயாரித்து குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற முடியும். அதன்பின்பு அமல்படுத்தப்பட்ட 105ஆவது அரசியலமைப்புத் திருத்தம், மாநிலங்களுக்கும் இதே அதிகாரத்தை வழங்கியது.
சட்டம் இயற்றும் முழு அதிகாரமும் மாநில சட்டப்பேரவைக்கு உள்ளது. அது 102 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உருவாக்கும் மாநில சட்டமன்றத்தின் உரிமையைப் பறிக்கவில்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 31 பி, ஒன்பதாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட 1994 சட்டத்தின் வரம்பிற்குள் வருவதால், வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைப் பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.