பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் முகம்மது ஷகாபுதீன் கான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழக ஆளுநர் அனைத்து உண்மைகளையும், ஆவணங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததன் படி, மாண்புமிகு குடியர தலைவரே விடுதலை செய்வது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் படைத்தவர் என்று 25.01.21 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பதிவு செய்துள்ளார்” என்று அந்த பிரமாண பத்திரித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலையாகிறார் பேரறிவாளன் – நான்கு நாட்களில் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என மத்திய அரசு தகவல்
“மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இந்த பரிந்துரை தொடர்பாக, சட்டப்படி முடிவெடுக்கப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21.01.21 அன்று, பேரறிவாளனின் மனு குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக துணை செயலாளர் முகம்மது ஷகாபுதீன் கான் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 2016ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
அந்த கடிதம் தொடர்பாக இரண்டு ஆண்டுகள் காலம் தாழ்த்திய மத்திய அரசு, இறுதியாக, விடுதலை செய்ய அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி, இந்த வழக்கில் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்து, தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர் பயாஸ் ஆகியோரை விடுதலை செய்ய முடிவெடுத்தது.
அமைச்சரவையின் அந்த பரிந்துரை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், தற்போது பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.